இணையற்ற தலைவர் அப்துல் கலாமுக்கு ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் புகழாஞ்சலி
சென்னை : நாடு போற்றிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தனது முகநூலில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது...
நேர்மை, எளிமை, அறிவுகூர்மை மிகுந்த இணையற்ற மனிதராக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம். ஒரு தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானி. இந்திய விண்வெளித்திட்டத்தில் அவரது பங்களிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அவரது திறமையைப் பார்த்த உலக நாடுகள் இந்தியாவின் மீது மரியாதை செலுத்தியது.
அவர் ஆற்றிய ஆர்வமூட்டும் உரைகள் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளையும், இளைஞர்களையும் தங்களுக்காகவும், தங்கள் நாட்டிற்காகவும் கனவு காண வைத்தது. "எதையும் சாதிக்கும் திறமை இந்தியாவிற்கு இருக்கிறது" என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தி, நம் நாட்டிற்கு உலக அரங்கில் மரியாதையும், பெருமையும் தேடித் தந்தவர்.
டாக்டர் கலாம் அவர்கள் தான் மட்டும் கனவு காணவில்லை. இந்த நாட்டின் இளைய தலைமுறையையும் "கனவு கணுங்கள். சாதிக்க முடியாதது எதுவும் இல்லை" என்று உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். இன்றைய தினம் அவர் நம்மிடம் இல்லை. அவரது மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்றுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்... இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ் பெற்ற அறிவியலாளருமான அப்துல்கலாம் உடல்நலக் குறைவால் ஷில்லாங் நகரில் காலமானார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் அப்துல்கலாம். ராமேஸ்வரத்தில் சாதாரண தமிழ் குடும்பத்தில் பிறந்த அவர், அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதலில் பொறியாளராகவும் பின்னர் அறிவியலாளராகவும், தொடர்ந்து குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தவர். தமிழையும், திருக்குறளையும் நேசித்தவர் என்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவர். குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தாலும் அதிகாரத்தை சுயநலனுக்காக பயன்படுத்தாதவர். தமது குடும்பத்தினரைக் கூட குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க வைக்காதவர். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆடம்பர மாளிகைகளைத் தவிர்த்து சாதாரண வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தவர்.
குடியரசுத் தலைவர், பேராசிரியர், அறிவியலாளர் என பல முகங்களை அவர் கொண்டிருந்தாலும் தலைசிறந்த மனிதனாக விளங்கியவர். அன்பு, கருணை, பாசம், அக்கறை, மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். அவரது மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அப்துல் கலாமின் கனவுகளை நிறைவேற்றுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்''
இவ்வாறு ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.