நம்பிக்கையில்லா தீர்மானம் எதுக்குன்னு கூட முதல்வருக்கு தெரியாதது வெட்கக்கேடு.. ஸ்டாலின் பொளேர்!
நம்பிக்கையில்லா தீர்மானம் எதற்கு கொண்டுவரப்பட்டது என தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பது வெட்கக்கேடு என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: நம்பிக்கையில்லா தீர்மானம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பது கூட தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பது வெட்கக்கேடு என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்றார்.
இதுகுறித்து டெல்லியில் பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு மீது ஏற்கனவே திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. அதைப்போலவே மீண்டும் கொண்டுவந்தால் வெற்றி பெறுவோம் என்றார்.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பதிலுக்கு ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார். அப்போது முன்பு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகருக்கு எதிரானது என்றார்.
வெட்கப்பட வேண்டிய விஷயம்
அதுக்கூட தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் ஸ்டாலின் கூறினார்.
பாஜக தான் காரணம்
தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்ததில்லை என்றும் அவர் கூறினார். அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம் என்றும் அவர் கூறினார்.
விரைவில் கட்சராயன் ஏரிக்கு செல்வேன்
விரைவில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கட்சராயன் ஏரிக்கு செல்ல உள்ளதாக ஸ்டாலின் கூறினார். தமிழகம் முழுதும் திமுகவினர் தூர்வாரிய குளங்களை பார்வையிடுவேன் என்றும் ஸ்டாலின் கூறினார்.