"கட்சி தொடங்காமலேயே சிலருக்கு முதல்வர் ஆசை".. விஜய்யைச் சொல்கிறாரோ ஸ்டாலின்??
விழுப்புரம்: சிலருக்கு இன்று கட்சி தொடங்காமலேயே முதல்வர் ஆசை வந்துள்ளது என்று திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் மறைமுகமாக நடிகர் விஜய்யைக் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சியின் இளைஞர்கள் அமைப்பு மாநாடு, விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவர் பொன்.குமார் தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மு.க.ஸ்டாலின். அவரது பேச்சிலிருந்து...
பதவிக்காக நாங்கள் இல்லை
திமுக, பதவிக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. இக் கட்சி உடனடியாகத் தேர்தலில் போட்டியிடவும் இல்லை.
வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுத்து போட்டி
அறிஞர் அண்ணா வாக்கெடுப்பு நடத்தி, தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தார்.
சிலருக்கு வந்த முதல்வர் ஆசை
ஆனால், சிலருக்கு கட்சி ஆரம்பிக்கும்போதே முதல்வராகும் ஆசை ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு கட்சி ஆரம்பிக்காமலேயே கூட, முதல்வராகும் ஆசை ஏற்படுகிறது.
மக்கள் பணியில் திமுக இளைஞர் அணி
திமுக, மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறது. இந்தக் கட்சியில் பல்வேறு அணிகள் இருந்தாலும், இளைஞர் அணி திறம்பட செயல்படுகிறது. அதற்கு நான் காரணம் அல்ல. இளைஞர்களின் திறமையே காரணம் என்றார் ஸ்டாலின்.