எங்கும் ஊழல்... திவாலாகப் போகிறது தமிழக அரசு: மு.க.ஸ்டாலின் அச்சம்!
சென்னை: தமிழகத்தில் ஊழல் லஞ்சம் நடமாடிக்கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அரசு கடனில் மூழ்கி திவாலாகும் சூழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2015 - 2016ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை முதல் அமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பினாமி அரசு
இன்று அதிமுகவினுடைய பினாமி அரசின் சார்பில் 2015 - 2016ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது. ஏனென்று கேட்டால், இந்த ஆட்சியில் அனைத்து துறைகளையும் பொருத்தவரையில் கடைசி இடத்தில் போய்கொண்டிருக்கிறது.
எதில் முதலிடம்
சட்டம் ஒழுங்கு கெட்டுக்கொண்டிருக்கிற நிலையில் கொலை, கொள்ளை மட்டுமல்ல, ஊழல் லஞ்சம் நடமாடிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
அனைத்திலும் ஊழல்
உதாரணமாக முட்டை வாங்குவதில் ஊழல், பருப்பு வாங்குவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறை பணிகளில் ஊழல், மாநகராட்சியில் சொல்ல முடியாத அளவிற்கு ஊழல், ஆவின் பாலில் ஊழல், மின்சாரம் வாங்கியிருப்பதில் பல ஆயிரம் கோடி ஊழல், அரசு பணிகளுக்கு டெண்டர் விடுவதிலும் ஊழல் நடந்துள்ளது. ஆடு, மாடு, மிக்சி கிரைண்டர் போன்ற நலத்திட்டங்கள் வழங்குவதிலும் ஊழல் நடைபெறுகிறது.
திவாலாகப் போகிறது
அதிமுக அரசின் நிதி நிலைமை இன்றைக்கு மிக மோசமான நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. கடனில் மூழ்கி திவாலாகும் சூழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. உதாரணமாக மின்சார வாரியத்தின் கடன் 72 ஆயிரம் கோடி ரூபாய். போக்குவரத்துக் கழகங்களில் நிதி இழப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய். ஆக பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை சேர்த்துப் பார்த்தால் மொத்த கடன் 4 லட்சம் கோடி ரூபாய்.
கடைசி இடம்
ஆக கடனைக் கூட திருப்ப செலுத்த முடியாத நிலையிலே அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது. தொழில் உற்பத்தியில் கடைசி இடத்திற்கு போய் கொண்டிருக்கிறது.
காரணம் இதுதான்
இதனை கண்டிக்கின்ற வகையில், இப்படிப்பட்ட நிலையில் இந்த அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு தார்மீகப் பொறுப்பை இழந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில்தான் திமுக சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று தாங்களின் வெளிநடப்புக்கான காரணத்தை கூறினார் மு.க.ஸ்டாலின்.