தங்களின் உண்மை நிலையை புரிந்துக் கொண்டேன்.. திருமாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்!
திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாதது குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் கடிதத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களின் உள்ள நிலை - உண்மை நிலையை புரிந்துக் கொண்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி பிரச்சனைக்காக எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி, காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர்மொய்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் நலக் கூட்டணி இந்த கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார். இதையடுத்து பல்வேறு ஆலோசனைக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். மேலும் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார் திருமாவளவன். அதில், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிக்கு பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து, மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களின் உள்ள நிலை - உண்மை நிலையை புரிந்துக் கொண்டேன். அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதை வரவேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்றுத் தேவையை முழுவதும் உணர்ந்து, இதை தேர்தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுகிட வேண்டும் என்ற கருத்து அனைவராலும் ஏற்கப்பட வேண்டியதாகும். இதில் எங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியே. நன்றி என அந்த கடிதத்தில் ஸ்டாலினஅ குறிப்பிட்டுள்ளார்.