ஜல்லிக்கட்டு போராட்டம்.. மெரினாவில் மின் விளக்குகளை அணைத்து வைப்பதா? ஸ்டாலின் கண்டனம்
மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை முதல்வர் பன்னீர்செல்வம் உடனடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு கோரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வரும் மெரினா கடற்கரை பகுதியில் மின்சார விளக்குகளை அணைத்து வைத்துள்ள சென்னை மாநகர காவல்துறைக்கு திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் காப்பாற்றக் கோரி நடைபெறும் போராட்டப் பகுதியில் அதிமுக அரசு இப்படி இருட்டடிப்பு செய்திருப்பது வேதனையளிக்கிறது. காலையிலிருந்து மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தும் அமைச்சர்களோ, முதலமைச்சரோ அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவும் இல்லை.
தன்னெழுச்சியாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு மின் தடை மட்டும் ஏற்படுத்தி விட்டால் போதும் என்ற மனப்பான்மையில் அதிமுக அரசு செயல்படுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறானது. ஜனநாயக முறையில் நடக்கும் போராட்டங்களை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்வது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் கடமை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்.
ஆகவே மாணவர்களும், இளைஞர்களும் போராடும் இடத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை முதலில் வழங்கி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக போராடும் மாணவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.