மதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின் – வைகோ… தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
மதுரை: தேவர் ஜெயந்தியை ஒட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஒரே விமானத்தில் மதுரைக்கு வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொருளாளர் வைகோவிற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
முத்துராமலிங்கதேவரின் 107 வது ஜெயந்தி விழாவில் பங்கேற்கவும், பசும்பொனில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் இன்று காலை மதுரை வந்தனர்.
விமான நிலைய வாசலில் தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது மு.க. ஸ்டாலினிடம், வைகோவுடன் ஒரே விமானத்தில் வந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், தேவர் திருமகனாருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன். வைகோவுடன் அரசியல் எதுவும் பேசவில்லை என்றார்.
தொடர்ந்து வைகோ வந்தார். அவரை ம.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்ற னர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நான் சிறுபிள்ளையாக இருந்தபோது எங்கள் வீட்டிற்கு முத்துராமலிங்கத்தேவர் வந்துள்ளார். அவரது ஒழுக்கம், தன்னடக்கம் ஆகியவற்றை பார்த்து அவரால் ஈர்க்கப்பட்டவன் நான்.
தேவர் குருபூஜைக்கு 39 ஆண்டுகளாக பசும்பொன் சென்று தேவருக்கு புகழ் வணக்கம் செலுத்தி வருகிறேன். இன்றும் வழக்கம் போல் செல்கிறேன். நான் சிறையில் இருந்த காலத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் இங்கு வராமல் இருந்ததில்லை.
மு.க.ஸ்டாலினுடன் ஒரே விமானத்தில் வந்தேன். நாங்கள் ஒரே குடும்பத்தில், இயக்கத்தில் இருந்தோம். அந்த நட்பில் உடல்நலம், ஆரோக்கியம் குறித்து பேசினோம். இப்படிப்பட்ட சந்திப்புகள் தமிழகத்தில் வளர வேண்டும் என்று அவர் கூறினார்.
ம.தி.மு.க உடன் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கருணாநிதி அன்பாக சொன்னது மகிழ்ச்சி தருவதாகவும் வைகோ கூறினார்.
தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக வைகோ, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.