அதிமுக ஆட்சியில் எல்லாரும் விரக்தியாகவே இருக்கின்றனர்: ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் யாரை சந்தித்தாலும் விரக்தியாகவே பேசுகின்றனர். அந்த அளவுக்கு தமிழகம் முடங்கிக் கிடக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் ‘நமக்கு நாமே - விடியல் மீட்புப் பயணம்' மேற்கொண்டுள்ள ஸ்டாலின், மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். இதுவரை 224 தொகுதிகளில் பயணம் மேற்கொண்டுள்ள அவர், 225வது தொகுதியாக சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் வியா பாரிகள், தொழிலாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.
அப்போது சிறு வியாபாரிகள் தங்களின் குறைகளை தெரிவித்தனர். அதிகாலை 3 மணிக்கெல்லாம் இங்கு வந்து, கீரை, புதினா உள்ளிட்டவைகளை வாங்கி விற்பனையை துவக்கி விடுவோம். மழை காலம் வந்தால் இந்த இடத்தில் நின்று வியாபாரம் செய்ய முடியாது. காய்கறி கழிவுகள் சரிவர அகற்றப்படாததால், குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசும். கழிப்பட வசதி போதிய அளவில் இல்லை. இருக்கும் கழிவறையிலும் பராமரிப்பு மிகவும் குறைவு என அடுக்கடுக்காக குறைகளை தெரிவித்தனர்.
சிறு வியாபாரிகள்
கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் சுற்றிவந்து வியாபாரிகள், காய்கறி வாங்க வந்திருந்த பொதுமக்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களை சந்தித்தார். வழி நெடுகிலும் மூட்டை தூக்கும் தொழிலாளிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பூங்கொத்து, சால்வை, சந்தன மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
குறைகளை கேட்ட ஸ்டாலின்
தனியார் ஹோட்டலில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். 300க்கும் அதிகமான வியாபாரிகள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய வியாபாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் காவல் துறையினர், மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளால் வியாபாரிகள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். மார்க்கெட் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. பாதுகாப்பும் இல்லை என புகார் தெரிவித்தனர்.
கோயம்பேடு காய்கறி சந்தை
திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு மார்க்கெட் உருவாக்கப்பட்டது. பழ மார்க்கெட், கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் யூனிட், லாரிகள் நிறுத்துமிடம், வாகன நிறுத்துமிடம், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. வியாபாரிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பராமரிப்பு கட்டணமும் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கோயம்பேடு மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதை இன்று சுமார் 1 மணி நேரம் நானே பார்த்தேன். நீங்களும் சொன்னீர்கள்.
முடங்கிப் போன ஆட்சி
அதிமுக அரசின் செயலற்ற தன்மையால் தமிழகத்தில் பெரும் தொழிலதிபர்கள் முதல் கூலித் தொழிலாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரை சந்தித்தாலும் விரக்தியுடன் பேசுகின்றனர். அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் தமிழகம் முடங்கியுள்ளது.
சுதந்திரமாக வியாபாரம்
வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என்பதை இந்த நமக்கு நாமே பயணத்தில் நேரில் உணர முடிந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தால் கோயம்பேடு வியாபாரிகள் காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள் என யாருடைய தொந்தரவும் இல்லாமல் சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டசபை தேர்தலில் மாற்றம்
வியாபாரிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். அதற்கு வரும் தேர்தலில் வியாபாரிகள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.