குட்கா லஞ்சம் : விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்யாவிட்டால் வழக்கு - ஸ்டாலின் எச்சரிக்கை
குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரப்போவதாக ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னை: குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்றவற்றை விற்க காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இரண்டாவது நாளாக சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் முதல்வர் பதிலளிக்க கோரி முழக்கமிட்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் லஞ்சம் வாங்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாக சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதி மறுக்கவே ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஸ்டாலின் குற்றச்சாட்டு
பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக, வணிகர்களிடம் லஞ்சம் பெற்று தமிழக அமைச்சர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதை சட்டசபையில் சுட்டிக்காட்டினேன். முதல்வர் பழனிசாமி ஆழமான பதிலை தரவில்லை என்றும் பூசி மெழுகும் வகையில் முதல்வர் பதில் அளித்தார் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆதாரம் கொடுத்தோம்
இந்த லஞ்ச விவகாரத்தை நேற்று சட்டசபையில் பேச முற்பட்ட போது, ஆதாரம் இல்லாமல் பேச முடியாது என சபாநாயகர் கூறிவிட்டார். எனவே இன்று அந்த லஞ்ச விவகாரம் தொடர்பான ஆதாரங்களை திரட்டி சபாநாயகரிடம் கொடுத்தேன். இதையடுத்து இன்று சிறிது நேரம் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
அமைச்சர் பதவிநீக்கம்
குட்கா லஞ்ச விவகாரத்தில் முறையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு வசதியாக லஞ்ச புகாருக்குள்ளாகியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
பூசி மெழுகிய முதல்வர்
முன்னாள் ஆணையர் ஜார்ஜ், டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகிய உயர் போலீஸ் அதிகாரிகளையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகவும், சம்பந்தமில்லாமலும் பொத்தாம் பொதுவாக பதில் கூறினார். பூசி மெழுகி பதில் கூறினார் முதல்வர்
வழக்கு தொடருவோம்
முதல்வர் உரிய பதில் தரவில்லை என்பதால் வெளிநடப்பு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.