6 மாதத்திற்கு பின் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் ஓபிஎஸ்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
இரு அணிகள் இணைப்பிற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குப் புறப்பட்டுவிட்டதாக ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 6 மாதத்திற்குப் பின் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் சென்றுள்ளார்.
Recommended Video
சென்னை: இரு அணிகள் இணையும் தருணம் கனிந்துவிட்டது. தான் அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் புறப்படுகிறேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 6 மாதத்திற்குப் பின் அவர் கட்சி அலுவலகம் சென்றுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஏற்பட்டன. நீண்ட இழுபறி பேச்சுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையே இரு அணிகளும் சேரும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று இணைப்பு நடந்துவிடும் என்றும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இழுபறி
இந்நிலையில் அணிகள் இணைய வேண்டுமானால், பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலாவை நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாக நின்றது. இதனால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்நிலையில், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி, எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
|
டுவிட்டர் பதிவு
இதனையடுத்து, ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் புறப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர், 6 மாதத்திற்குப் பின் கட்சி அலுவலகத்திற்கு இன்று சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதிதான் அவர் கடைசியாக அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரியாதை
இதனைத் தொடர்ந்து, இணைப்பு இன்று முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் செல்ல உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.