6 மாதத்தில் புதிய பாடத்திட்டம் தயார்... நிபுணர் குழு தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தகவல்
தமிழக பள்ளிகளுக்கான மாநில பாடத்திட்டம் இன்னும் 6 மாதங்களுக்குள் தயாராகும் என்று நிபுணர் குழு தலைவர் எம். ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக பள்ளிகளுக்கான, மாநில பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அவை இன்னும் 6 மாதங்களுக்குள் தயாராகும் என்று நிபுணர் குழு தலைவர் எம். ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டம் 5 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். ஆனால் தற்போது பல வருடங்கள் ஆகியும் இன்னும் மாற்றப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், புதிய பாடத்திட்டத்தை தரமாக மாற்றி அமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் உறுப்பினர் - செயலாளராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க. அறிவொளி மற்றும் 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடத்திட்ட மாற்றம் குறித்து நிபுணர் குழு தலைவர் எம். ஆனந்த கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் பல்வேறு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். இன்னும் 6 மாதங்களில் இந்த பாடத்திட்டங்கள் தயாராகும்.
பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தால் மட்டும் போதாது. அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை மாற்ற வேண்டும்.
பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் தபால் அல்லது இணையதளம் மூலமாகக் கருத்து தெரிவிக்கலாம். தமிழக மாணவர்கள் புத்திசாலிகள். அவர்கள் பாடத்திட்டத்தை மாற்றினால் அதற்கு ஏற்ப வல்லவர்களாக வருவார்கள்." என்று கூறியுள்ளார்.