கோவில்பட்டியில் விரைவில்.. விவசாயிகள் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு சிலை!
கோவில்பட்டி: விவசாயிகளின் போராட்டங்களை முன்னிறுத்தி அவர்களுக்காக பாடுபட்டவரும், விவசாயிகள் சங்கத்தலைவராக பதவி வகித்தவருமான மறைந்த நாராயணசாமி நாயுடுவிற்கு தமிழகத்தில் முதன்முதலாக கோவில்பட்டியில் சிலை நிறுவப்பட உள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமான 1930 ஆம் ஆண்டிலேயே விவசாயத்திற்கான போராட்டங்கள் துவங்கி விட்டன. கடந்த 1966 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கமானது உருவெடுக்கப்பட்டது.
அப்பொழுது நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், முத்துமல்ல ரெட்டியார், முத்துசாமி கவுண்டர், டாக்டர் .சிவசாமி, டாக்டர்.கொண்டல்சாமி, மயில்சாமி, வி.கே.ராமசாமி, திருமதி சுந்தராம்பாள், நஞ்சகவுடர், கு.வரதராஜன், சாத்தூர் ஜெகந்நாதன் போன்ற பலர் பிரச்சார தளத்தை அமைத்து விவசாயிகள் சங்க அமைப்பைக் உருவாக்கினர்.
அப்போதைய காலகட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவராக பதவி வகித்த நாராயணசாமி நாயுடு அவர்கள் கோவை மாவட்டத்தில் செங்காலிப் பாளையத்தில் பிறந்தவர். விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் விவசாயிகள் போராட்டத்தை எடுத்துச் செல்ல முயற்சிகள் செய்தவர் அவர். நாராயணசாமி நாயுடு பொதுத்தேர்தல் நடைபெற்ற கால கட்டத்தில் கோவில்பட்டி பயணியர் விடுதியில் 1984ம் ஆண்டில் காலமானார்.
அவர் தன்னுடைய கடைசி காலங்களைக் கழித்த கோவில்பட்டி பகுதியில் அவருக்கு சிலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மேலும், தமிழக விவசாயிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்த பிரச்சினைகள் மற்றும் போரட்டங்கள் குறித்த நூலும் வெளியிடப்பட உள்ளது.