பாம்பன் பாலமருகில் மக்கள் ஜனாதிபதி கலாமிற்கு விரைவில் “20 அடி சிலை”- ராமேஸ்வர அரிமா சங்கம் அறிவிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஷில்லாங்கில் மாரடைப்பால் காலமான மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேய்கரும்பில் கடந்த 30 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அன்று ராமேஸ்வரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு இன்றுடன் 9 நாட்கள் ஆகின்றன. தினமும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சங்கத்தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "சென்னை கோல்டன் பிரண்ட்ஸ் அரிமா சங்கமும், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கமும் இணைந்து ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலம் அருகில் 20 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய இரும்புச் சிலை வைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம் பர் 26 ஆம் தேதி நடைபெறு கிறது. இந்த விழாவில் அரிமா சங்கத்தைச் சேர்ந்த கவர்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். சிலை வடிமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வரு கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.