வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பு சிலைகள் மீட்பு!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு ஓன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தீனதயாளன் என்பவரின் வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. வீட்டின் உரிமையாளரான தீனதயாளன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவர், கடந்த 8 வருடங்களாக கைவினைப் பொருட்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை நடத்தப்படும் வீடு சிலை கடத்தலில் தொடர்புடைய பழைய குற்றவாளிக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் ஏராளமான சிலைகள் உட்பட பாரம்பரிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சோதனையில், 34 சாமி சிலைகளை, போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு டி.எஸ்.பி., சுந்தரம் கூறுகையில்,
வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 34-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரும்பு மற்றும் கற்களால் இந்த ஆன சிலைகள் கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்தவை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிலை கடத்தல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தொடர்பாக வீட்டு உரிமையாளர் தீனதயாளனை தேடி வருகிறோம் என்று அவர் கூறினார்.