கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை பெங்களூர் கொண்டு செல்ல இடைக்காலத் தடை
மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை பெங்களூருக்கு கொண்டு செல்ல இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாநகர் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகர் என்று இலக்கியம், தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொல்லியல்துறை அகழாய்வு பெங்களூருப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்புக்குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடியில் 2015 ஜனவரி முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 43 தொல்லியல் குழிகள் இடப்பட்டு ஆய்வை மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் மட்டும் 1800 சங்க கால தமிழர்கள்
பயன்படுத்திய பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் தமிழகத்தில் முதன்முறையாக சங்க கால நகர நாகரீகத்துடன் கூடிய கட்டட அடித்தளம், கால்வாய் அமைப்புகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. சுட்ட செங்கற்களால் ஆன வீட்டுச் சுவர்கள், உறைக் கிணறுகள், திறந்த, மூடிய, உருளை வடிவம் என கால்வாய்களும் கண்டறியப்பட்டன.
எழுத்துகளுடன் உள்ள 32 சுடுமண்பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2ஆவது கட்டமாக 2016 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட 59 குழிகளின் ஆய்வுகளிலும் 3800 அரிய வகை சங்க கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதே போல் யானைத் தந்தத்தினால் ஆன தாயக்கட்டைகள், சதுரங்கக் கட்டைகள், பெண்கள் அணியும் காதணிகள், மான் கொம்பினால் ஆன கத்தி போன்ற அமைப்புகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால பொருட்களை தொல்லியல்துறை கொண்டு சொல்ல உள்ளதாக சொல்லப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிழையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் கனிமொழி தொடர்ந்த வழக்கில் உய்ரநீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. பொருட்களை பெங்களூருக்கு கொண்டு செல்லாமல் கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. தொல்லியல்துறை இயக்குனர் பதிலளிக்க ஆணையிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.