ஸ்ரீரங்கத்தில் போலி வாக்காளர்கள் வீடு வீடாக சென்று அடையாளம் காணப்படுவார்கள்: சக்சேனா
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து, அவரது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது. இதனால், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து அத்தொகுதியில் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, ஸ்ரீரங்கம் தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆளும்கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதாக, ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா. அப்போது அவர் கூறியதாவது :-
இடைத்தேர்தலில், பண பலம் மற்றும் படை பலத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அல்லது கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையிடலாம். குறுஞ்செய்தி,மின் அஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம்
போலி வாக்காளர்களைக் கண்டறியும் பணி, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் முடிவடையும். அவர்கள் தேர்தலின் போது வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஸ்ரீரங்கத்தில் போலி வாக்காளர்கள் வீடு வீடாக சென்று அடையாளம் காணப்படுவார்கள். ஸ்ரீரங்கத்தில் 39 மையங்கள் அமைக்கப்பட்டு அவைகள் 10 பறக்கும் படைகள், 3 சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதோடு தேவைப்பட்டால் இன்னும் அதிக பறக்கும் படைகள் மற்றும் சோதனை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சந்தீப் சக்சேனாவை நேரில் சந்தித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை விரைவில் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.