நாளிதழ்களில் இன்று: "5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை"
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமலர்: "5 ஆண்டுகளாக எந்த பாதிப்பும் இல்லை" - ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 5 ஆண்டுகளாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நிர்வாகம் தரப்பில் தீர்ப்பாயத்தில் வாதிடப்பட்டதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி சான்று மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அனுமதி சான்றை புதுப்பிக்கக் கோரி ஸ்டெர்லைட் சார்பாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை புதுப்பிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது வாதாடிய ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் பி. எஸ். ராமன், அப்பகுதியில் ஆலை இயங்குவதால் காற்று, நிலத்தடி நீர், காற்றில் மாசு ஏற்படுகிறதா மற்றும் நோய் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டதாகவும், ஆய்வுக்கு பிறகு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதன்பின் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டதாக கூறிய அவர், 2013ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார் என அச்செய்தி மேலும் விவரிக்கிறது.
தினமணி : "மதங்கள், தெய்வங்கள் எனக்கு இடையூறு கிடையாது" - நடிகர் கமல்
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் வியாழக்கிழமையன்று மீனவ மக்களை சந்தித்து பேசினார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், "நான் மக்களை சந்திப்பதும், இந்த சுற்றுப்பயணமும் என்னை தேற்றிக் கொள்ளத்தான். மதங்கள், தெய்வங்கள் எதுவும் எனக்கு இடையூறு கிடையாது. பாரம்பரியம், கலாசாரம் மற்றும் முன்னோடிகளை வணங்குவதில் எனக்கு ஆட்சேபனை கிடையாது. இந்தியா பண்பாடு மிக்க நாடு. ஆனால் இன்றைய நிலை வேறு. இந்த நிலைக்கு நாம்தான் காரணம். நாம் கொடுத்திருந்தால் மாறியிருப்போம். எனவேதான் நான் குரல் கொடுக்கிறேன்" என்று தேரடித்திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கமல் பேசியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
தி இந்து (ஆங்கிலம்): கொச்சிக்கு செல்லும் எம்.எல்.ஏக்கள்
கர்நாடகா மாநில காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏக்கள் வியாழக்கிழமை இரவன்று வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதாக ’தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் கொச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கர்நாடகா மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, எம்.எல்.ஏக்களுடன் தனி விமானம் மூலம் கொச்சி செல்ல இருந்ததாகவும், ஆனால் மத்திய அரசின் அழுத்தத்தால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
பிற செய்திகள்:
- அமெரிக்கா- வட கொரியா உச்சிமாநாடு: என்ன சொல்கிறார் அதிபர் டிரம்ப்?
- இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்
- வாதம் விவாதம் : எடியூரப்பாவை முதலைமைச்சராக்கியது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
- ஹவாயின் எரிமலை சீற்றத்தால் வெளியேறும் நச்சுப் புகை