அலங்காநல்லூரில் 2வது நாளாக விடிய விடிய தொடரும் போராட்டம்.. அணி அணியாய் திரளும் வெளிமாவட்ட இளைஞர்கள்
அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் விடிய விடிய கிராம மக்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களோடு ஒன்றிணைத்துள்ளதால் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அலங்காநல்லூரில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. வாடி வாசல் பகுதி அருகே கிராம மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவும் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து, 2 வது நாளாக பல மணி நேரம் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்தன.
முதல்கட்ட விடுப்பு
இதனை அடுத்து, முதல்கட்டமாக காளைகளை அவிழ்த்துவிட்டதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 38 பேரை போலீசார் விடுதலை செய்தனர். நேற்று காலையில் தடியடி நடத்தி கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
வெளியே பொதுமக்கள் விடுதலை கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில், கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களும் இளைஞர்களும் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து விடுதலையாக மறுத்தனர்.
சீமான், அமீர் பேச்சுவார்த்தை
இதனையடுத்து, திரைப்பட இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைது செய்யப்பட்டோர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தொடரும் போராட்டம்
இந்நிலையில், அலங்காநல்லூர் கிராம மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய மாநில அரசுகள் உறுதிமொழி அளிக்கும் வரையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
அணி அணியாய்..
இதனையடுத்து, அலங்காநல்லூரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் கிராம மக்கள் போராட்ட களத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். மேலும், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் அணி அணியாய் திரண்டு வருகின்றனர். இதனால் அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.