கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்த நீங்க என்னை மிரட்டுறீங்களா.. கமல் கடுங்கோபம்
கடமை செய்ய மறந்தவர்கள், என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை என்று மிரட்டுவதா? என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: கடமை செய்ய மறந்தவர்கள், வரி ஏய்ப்பு நடவடிக்கை எடுப்பேன் என்று என்னை மிரட்டுவது கோபத்தையும், சிரிப்பையும் ஒருங்கே வரவழைக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தின் எல்லாத்துறையிலும் ஊழல் நிரம்பியுள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு 'மக்கள் மனதில் உள்ளதையே நடிகர் கமல்ஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்' என எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு ஆளும் அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கமலின் கருத்துக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், " தைரியம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும். கமலஹாசனுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது. கமல் கூறும் கருத்துக்களுக்கு அமைச்சர்கள் பதில் மட்டுமே கூறுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்.. என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.