டிபன் பாக்ஸை கழுவி தர மறுத்த மாணவனை ஆள் வைத்து அடித்த ஆசிரியர்
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி சமத்துவபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் மனோஜ்குமார். சமத்துவபுரம் அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியின் ஆசிரியர் முருகன் தனது டிபன் பாக்சை சுத்தம் செய்து தரும்படி மனோஜ்குமாரிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து இதே வேலை செய்து வந்த மாணவன் ஒருநாள் மறுத்துள்ளார். இதனால் மாணவனை பிரம்பால் ஆசிரியர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், பள்ளி ஆசிரியரிடம் கேட்டனர். அதற்கு ஆசிரியர் முறையான பதில் அளிக்காமல் அவர்களை விரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பள்ளி ஆசிரியர் குறித்து துண்டு பிரசுரம் அச்சடித்து வினியோகம் செய்தனர். எனவே மேலும் ஆத்திரம் அடைந்த முருகன், மாணவனை மிரட்டி குண்டர்களை வைத்து அவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன மாணவன் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்தார். இதுகுறித்து மாணவனின் தாய் மகுடீஸ்வரி சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.