ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்காசியில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய மாணவர் மீட்பு
செங்கோட்டை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்காசியில் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டம் நடத்திய மாணவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வார காலமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் ராம்குமார் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த இரு தினங்களாக தென்காசியில் நடந்து வரும் போராட்டத்தில் ராம்குமார் பங்கேற்றுள்ளார்.
இதையடுத்து தென்காசி தாலுகா அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.எல்.என். அலுவலக குடியிருப்பில் உள்ள செல்போன் டவரில் இன்று ஏறிய ராம்குமார், நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய ராம்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கச் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.