தலைமை செயலகம் முன் மாணவர் தீக்குளிக்க முயற்சி… சென்னையில் பரபரப்பு
காவலர் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக் கோரி சென்னை தலைமை செயலகத்தின் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் ஒரு மாணவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: காவலர் தேர்வில் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் சென்னை தலைமைச் செயலகம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.
காவலர் தேர்வில் வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று கோரி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை தலைமைச் செயலகம் முன்பு ஒன்று கூடினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் கடும் கெடுபிடி காட்டினர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தன் மேல் ஊற்றிக் கொண்டார். பின்னர், தீக்குச்சியை பற்ற வைத்து தீக்குளிக்க முயன்றார்.
மாணவரின் இந்த திடீர் தீக்குளிப்பு முயற்சியால் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தலைமைச் செயலகப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், தீக்குளிக்க முயன்ற மாணவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.