பங்காரு அடிகளாரின் மகனால் கடுமையாக தாக்கப்பட்டதால் காயமடைந்தாரா மாணவர் விஜய்?
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் படித்து வந்த விஜய் என்ற மாணவர் கல்லூரி தாளாளரும், பங்காரு அடிகளாரின் மகனுமான செந்தில்குமாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது கல்லூரி குறித்து பேஸ்புக்கில் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் விஜயை தாக்கியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவர் விஜய், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவர் விஜய்க்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததாக கூறி, அவரது உறவினர்கள் பயிற்சியிலிருந்த மருத்துவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நோயாளியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ள மற்ற நோயாளிகளும் சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர்.
இதனிடையே, மாணவரைத் தாக்கிய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மாணவரின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மாணவனின் தாயார் அளித்துள்ள புகாரை விசாரணை செய்த அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் வேறு யாருமல்ல, பங்காரு அடிகளாரின் மகன்தான் இந்த செந்தில்குமார். இந்தக ்கல்லூரி நிர்வாகமும், பங்காரு அடிகளாரின் குடும்பமும் பல சர்ச்சைகளில் சிக்கி வருவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.