அரசியல் கட்சியினரின் பகடைக்காயாக மாணவர்கள் மாறிவிடக்கூடாது: பொன். ராதாகிருஷ்ணன்
நெல்லை: அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட பிரச்சனையில் அரசியல் கட்சியனரின் பகடை காயாக ஐஐடி மாணவர்கள் மாறி விட கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி சாதனை படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லையில் பாஜக சார்பில் நடந்த உறுப்பினர் சேர்க்கை கூட்டத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை போல், ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க பிரதமர் மோடி மற்றும் கல்வி அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது . இதுகுறித்த திட்டம் விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
சென்னை ஐஐடி மாணவர்கள் சார்பில் செயல்பட்டு வந்த அம்பேத்கார், பெரியார் வட்டத்துக்கு தடை செய்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் அரசியல் கட்சியனரின் பகடை காயாக மாணவர்கள் மாறி விட கூடாது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி சாதனை படைக்க வேண்டும். மாணவர்களின் சமூக நலன், கருத்து, சமூக நீதி ஆகியவற்றிக்கு எதிராக மத்திய அரசு ஓருபோதும் தலையிடாது என அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் இயற்கையாக அமைந்துள்ளது குளச்சல் துறைமுகம். மத்திய அரசு குளச்சலில் துறைமுகம் அமைக்க ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணி விரைவில் நிறைவடையும். இங்கு துறைமுகம் அமையும் பட்சத்தில் தென் மாவட்டங்கள் வளமடையும் என்று கூறினார்.
பாஜக அரசு புதிய நீர்வழிதிட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி உள்பட 101 நதிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய மோட்டார் வாகன சட்டம் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஏற்று கொள்ள வேண்டும். பாஜக ஓராண்டு ஆட்சியில் இலங்கையில் இருந்து 900 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.