குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள்.. அதிர்ச்சியில் நெல்லை மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதில் மாணவர்களின் பங்கும் கலந்திருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம், முக்கூடலை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி கிருஷ்ணன். இவர் சில தினங்களுக்கு முன்பு நெல்லை சுத்தமல்லி அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
காவல்துறை விசாரணையில், சம்பவத்தன்று கிருஷ்ணன் பட்டன்கல்லூர் என்னுமிடத்தில் சூப் கடையில் நின்று கொண்டிருந்தபோது மாணவர்களுடன் தகராறு ஏற்பட்டது.
மாணவர்கள் கொலை
அதே ஊரை சேர்ந்த விஜய்கதிரவன் (24), விஜய் (19), லோகராஜ் (19) ஆகியோர் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 3 பேர் சேர்ந்து அவரை கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்று கொலை செய்தது தெரியவந்தது. மாணவர்கள் மூவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.
பல வழக்குகள்
கைதான விஜய், லோகராஜ் ஆகிய இருவர் கல்லூரியில் பயில்பவர்கள், விஜய்கதிரவன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த கொலை வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள், 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.
மற்றொரு வழக்கு
இதே போன்று இன்னொரு மிரட்டல் வழக்கிலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் நெல்லை மாவட்டம் ஆனைகுடியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. ஜாதி அமைப்பின் தலைவராக உள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவர் பேசிய வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் பரவியது.
என்கவுண்ட்டர் கொலை
தம்மை நெல்லை மாவட்ட போலீஸார் என்கவுண்டர் மூலம் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பிறகு அவரது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாட்ஸ்அப் வீடியோவில், நெல்லை மாவட்ட போலீஸை மிரட்டும் வகையில் பேசி பதிவிட்டிருந்தனர்.
மாணவர் கைது
இதுகுறித்து வந்த புகாரின் பேரில் நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்த ஒரு மாணவரை கைது செய்தனர். அவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவரது பெயரை குறிப்பிடப்படவில்லை.
மற்றொருவர் கைது
இதே போல தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தங்கதுரை (24), என்பவர் வீடியோவில் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே நாளில் கொலைவழக்கிலும் மிரட்டல் வழக்கிலும் 7 மாணவர்கள் கைது செய்யபபட்டுள்ள சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கல்விக்கு பேர் போன நெல்லை மாவட்டம்
கல்விக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில் கொஞ்ச காலமாக கொலை, ரவுடியிஸம் உள்ளிட்டவைகள் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் குற்றச்சம்பவங்கள் தொடங்கி உள்ளதும் இதற்கு மாணவர்களை பலிகடாவாக்க கூலிப்படைகள் களமிறக்கி உள்ளதா என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.