நாகர்கோவிலில் 2 மாணவிகள் திடீர் மாயம்… வலைவீசி தேடும் போலீசார்
நாகர்கோவிலில் காணாமல் போன மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற போது மாயமான இரண்டு மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தக்கலை அருகே அழகிய மண்டபம் பொந்தன்பிலாவிளையை சேர்ந்தவர் டேவிட். இவரது மகள் ஷைலாமோள். இவர் நெய்யூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஷைலாமோள் திடீரென மாயமானார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஷைலாமோள் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கே போனார் என்றும் தெரியவில்லை. இதையடுத்து டேவிட் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷைலாமோளை தேடி வருகிறார்கள்.
இதே போல் தோவாளை மெயின் ரோட்டை சேர்ந்தவர் உஷா. இவரது மகள் முருகேஷ்வரி. இவர் நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற முருகேஷ்வரி மாலை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தேடினார்கள். தோழிகளிடமும் விசாரித்தனர். முருகேஷ்வரி கிடைக்காததை அடுத்து அவரது தாயார் உஷா நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்மணி வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி முருகேஷ்வரியை தேடி வருகிறார்.