ஜல்லிக்கட்டு.. கடலூர், புதுச்சேரியில் கொட்டும் மழையிலும் இளைஞர்கள் போராட்டம்
தஞ்சை, நாகை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையிலும் மாணவர்கள் விடாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடலூர்: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் விடியவிடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சை, நாகை, கடலூர் புதுச்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு மீதனா தடையை நீக்கக்கோரியும் பீட்டாவை இந்தியாவில் தடைசெய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர் மற்றும் பனியில் அவர்கள் தொடர்ந்து இரவு பகலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று பகல் முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500 பேர் பெரும் அவதி அடைந்துள்ளனர். இருப்பினும் பின்வாங்காமல் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. ஆனாலும் ஏஎப்டி மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் அடாது மழை பெய்தாலும் விடாது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் தமிழக இளைஞர்கள் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.