4 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்படும் கல்வி நிறுவனங்கள். போராட்டங்களால் மூடப்படும்?
நான்கு நாட்களுக்கு பிறகு பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை: பொங்கல் பண்டிகை மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான விடுமுறைகள் முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதில் பெருமளவில் மாணவர்கள் கலந்து கொண்டு பண்பாட்டை பாதுகாக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன. திறந்த உடன் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
விடிய விடிய போராட்டம்
அலங்காநல்லூரில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை சென்னையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதே போன்று கொடுங்கையூரிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவர் பேரணி
நாளை காலை மாணவர்கள் கலந்து கொள்ளும் பேரணி ஒன்று மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை ஆரப்பாளையம் முதல் கோரிப்பாளையம் வரை பேரணி நடத்தப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற உள்ளது.
வகுப்பு புறக்கணிப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரியும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
வழக்கம் போல்..
4 நாட்களுக்கு பிறகு 18ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் போராட்டங்களை அறிவித்திருந்தாலும் கல்லூரி அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.