ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் கொந்தளிப்பு... சேலத்திலும் வலுக்கிறது போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சேலத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் நடத்தினர்.
சேலம்: சேலம் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் வலு பெற்று வருகின்றன. இன்று சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும்; விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்; பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கியது உள்ளிட்ட தமிழர்கள் மீதான எதிர்ப்பு அரசியலை கைவிட வேண்டும் என்று கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் ஒன்று திரண்ட மாணவர்கள், இளைஞர்கள் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கலில் நடைபெறும் முக்கியமான நிகழ்வு. அதனை நடத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்
மேலும், பொங்கல் விடுமுறையை விருப்ப விடுமுறையாக இல்லாமல், கட்டாய விடுமுறையாக மாற்ற வேண்டும் என்றும் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.