விவசாயிகளுக்காக மெரினாவில் மாணவர்கள் போராட்டம்! திடீரென கடலில் இறங்கியதால் பதற்றம்!!
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி இதுவரை நேரில் சந்திக்கவில்லை.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் மாணவர்கள் மீண்டும் மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இன்றும் பாதுகாப்பு
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மெரினாவில் மாணவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இன்றும் சென்னை மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடலில் இறங்கி போராட்டம்
ஆனால் போலீசாரின் தடையையும் தாண்டி 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டனர். அவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுக்குள் இறங்கிய போலீஸ்
விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மீனவர்களை பாதுகாக்க கோரியும் மாணவர்கள் முழக்கமிட்டனர். கடலில் இறங்கிய இந்த மாணவர்களை கைது செய்ய போலீசாரும் கடலில் இறங்கினர்.
கடலின் உள்பகுதிக்கு சென்ற மாணவர்கள்
ஆனால் போலீசார் நெருங்க நெருங்க... மாணவர்கள் கடலின் உள் பகுதிக்குள் செல்ல தொடங்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீசாரும் செய்வது அறியாமல் தவித்தனர்.
மாணவர்கள் கைது
மீண்டும் மீண்டும் போராடி கடலின் உள்பகுதிக்குச் சென்ற இளைஞர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, சோறு போடும் விவசாயிகள் வாழ வேண்டும் என மாணவர்கள் முழக்கமிட்டனர். மாணவர்களின் போராட்டத்தால் சென்னை மெரினா கடற்கரையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மெரினாவில் அதிகாரிகள் ஆய்வு
மாணவர்கள் கடலுக்குள் இறங்கி நடத்திய போராட்டத்தால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்பகுதியில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.