வெட்ட வெளியில் கொட்டும் குளிரை பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காக நள்ளிரவிலும் போராடும் இளைஞர் படை!
தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டை மீட்பதற்காக அலங்காநல்லூரில் வெட்ட வெளியில் கொட்டும் குளிரை பொருட்படுத்தாமல் இளைஞர் படை நள்ளிரவை தாண்டியும் போராடி வருகிறது.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பதற்காக வெட்ட வெளியில் கொட்டும் குளிரை படுத்தாமல் நள்ளிரவிலும் உர சாக்குகளில் படுத்துறங்கி தங்களது உணர்வெழுச்சியை வெளிப்படுத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையானது தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நினைத்தவர்களுக்கு பேரிடியை தந்திருக்கிறது இளைஞர் பட்டாளம். ஜல்லிக்கட்டு என்பது ஒரு பகுதி நிகழ்வு அல்ல; தமிழினத்தின் பண்பாட்டு நிகழ்வு என்ற கோரிக்கையுடன் தன்னெழுச்சியாக இளைஞர்கள் களமிறங்கினர்.
இதன் உச்சமாக அலங்காநல்லூரில் திங்கள்கிழமை காலை முதல் நள்ளிரவை தாண்டி செவ்வாய்க்கிழமையும் இந்த இளைஞர்களின் அமைதிவழி போராட்டம் தொடருகிறது. நன்கு படித்து உயர் வேலைகளில் இருக்கும் இந்த இளைஞர்கள் படை, வெட்ட வெளியில் உரசாக்குகளை போர்த்தி கொண்டு கொட்டும் குளிரையும் தாங்கிக் கொண்டு களத்தில் தொடர்ந்து போராடுகின்றனர்.
இளைஞர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா? என்பதுதான் தமிழகத்தின் எதிர்பார்ப்பு.
உரிமை மீட்பில் அலங்காநல்லூர் வாடிவாசல் போர்க்களம்!