ராமேஸ்வரம் போராட்டத்தால் வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த மாணவர்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடந்த மீனவர்களின் போராட்டத்தால் பள்ளிகளுக்குப் போன மாணவர்கள் மாலையில் வீடு திரும்புதில் பெரும் சிரமம் ஏற்பட்டு விட்டது.
வழக்கமாக பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு விடவில்லை. இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளிகள் வழக்கம் போல இயங்கின.
இந்த நிலையில் நேற்று 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட செயல், ராமேஸ்வரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடும் கோபத்துடன் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தண்டவாளம் தகர்ப்பு, சாலை மறியல், பஸ்கள் மீது தாக்குதல் என அவர்கள் உக்கிரமான போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று ராமேஸ்வரமே போர்க்களமாக மாறிப் போனது. சாலைப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது. ரயில்களும் ஓடவில்லை.
இதனால், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலிருந்து ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் கூலி வேலைகளுக்கு சென்றவர்களும் ஊருக்குள் வரமுடியாமல் திணறிப் போனார்கள்.
தீவிற்கு செல்லும் வாகனப் போக்குவரத்து அடியோடு நிறுத்தபட்டு விட்டதால், எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
நிலைமை மோசமானதால், தேவர் குரு பூஜை பாதுகாப்புக்கு சென்ற போலீசார் ராமேஸ்வரத்திற்கு திருப்பி விடப்பட்டனர்.