அரக்கோணத்திலிருந்து வேளச்சேரி செல்ல இனி ரயில் மாற வேண்டாம்... ஒரே ரயிலில் பயணிக்கலாம்!
சென்னை: அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் இன்று முதல் வேளச்சேரி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதேபோன்று மறுமார்க்கத்தில் வேளச்சேரியிலிருந்து நேரடியாக அரக்கோணத்திற்கு ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுவரை, அரக்கோணம், ஆவடி, ஆம்பத்தூர், உள்ளிட்ட இடங்களில் இருந்து வேளச்சேரி, திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இறங்கி, பூங்கா நகர் ரயில் நிலையம் சென்று வேறொரு ரயிலில் மாறி பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சென்னை பறக்கும் ரயில் தடத்துடன் புறநகர் ரயில் தடங்களை இணைத்து இன்று முதல் புதிய ரயில் சேவைகளை அறிமுகப் படுத்தியுள்ளது தெற்கு ரயில்வே. இதன்படி, அரக்கோணம் - சென்னை கடற்கரை, சூலூர்பேட்டை - சென்னை கடற்கரை ரயில் பறக்கும் ரயில் மார்க்கத்துடன் இணைக்கப் படுகிறது. மேலும், அரக்கோணம், சூலூர்ப்பேட்டை ரயில்கள் வேளச்சேரி வரை நீட்டிப்பு செய்யப் படுகிறது.
எனவே, இந்த புதிய ரயில் சேவை மூலம் பயணிகளின் அலைச்சல் குறையும்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
*சூலூர் பேட்டை-கடற்கரை, அரக்கோணம்-கடற்கரை வரை இயக்கப்பட்ட குறிப்பிட்ட சில மின்சார ரயில்கள் பயணிகளின் நலன் கருதி, இன்று முதல் (வெள்ளிக்கிழமை) வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அந்த ரயில்கள் பின்வருமாறு:-
* பொன்னேரியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரைக்கு 8.05 மணிக்கு வந்து, பின்னர், அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, வேளச்சேரிக்கு காலை 8.55 மணிக்கு செல்லும்.
* ஆவடியில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரைக்கு காலை 8.30 மணிக்கு வந்து, அதன்பின்னர், அங்கிருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு, வேளச்சேரிக்கு 9.20 மணிக்கு சென்றடையும்.
* அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் மகளிர் சிறப்பு மின்சார ரயில், சென்னை கடற்கரைக்கு காலை 8.55 மணிக்கு வந்து, அதையடுத்து, அங்கிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, 9.45 மணிக்கு வேளச்சேரி செல்லும்.
* சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரைக்கு 9.45 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, காலை 10.35 மணிக்கு வேளச்சேரி சென்றடையும். அதேபோல், மறுமார்க்கமாக வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள், திருத்தணி, அரக்கோணம், ஆவடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த ரயில்கள் வருமாறு:-
* காலை 11.20 மணிக்கு வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 12.05 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயில், பின்னர் அங்கிருந்து, பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு, திருத்தணிக்கு பிற்பகல் 2.40 மணிக்கு செல்லும்.
* வேளச்சேரியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் மகளிர் சிறப்பு மின்சார ரயில், சென்னை கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு வந்து, அங்கிருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.05 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
* இரவு 7.20 மணிக்கு வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு இரவு 8.15 மணிக்கு வரும் மின்சார ரயில், பின்னர் அங்கிருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு ஆவடி செல்லும்.
* வேளச்சேரியில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரைக்கு 9.35 மணிக்கு வந்து, அங்கிருந்து 9.40 மணிக்கு புறப்பட்டு, ஆவடிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும். மேலே கூறப்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படும் நேரங்களில், சென்னை கடற்கரையில் வேளச்சேரிக்கு செல்லும் மின்சார ரயில்களும் (காலை 8.15., 8.35., 9.05., 9.55 மணி), அதே போல், வேளச்சேரியில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும் (காலை 11.15., இரவு 7.30., இரவு 8.50 மணி) ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கூறப்பட்ட அனைத்து மின்சார ரயில்களின் கால அட்டவணைகளும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் உள்ள கால அட்டவணைப்படி ரெயில்கள் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு என்ன பயன் :
அரக்கோணம், ஆவடி, ஆம்பத்தூர், உள்ளிட்ட இடங்களில் இருந்து வேளச்சேரி, திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், இனி சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இறங்கி, பூங்கா நகர் ரயில் நிலையம் சென்று வேறொரு ரயிலில் ஏற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நேரடியாக வேளச்சேரி வரை உள்ள இடங்களுக்கு ரயிலில் செல்லலாம்.
அதேபோன்று, ஆவடி, அம்பத்தூர், அரக்கோணம் போன்ற இடங்களுக்குச் செல்ல இனிமேல் சென்டிரல் ரயில் நிலையத்திற்குப் போகத் தேவையில்லை. மாறாக வேளச்சேரி முதல் கடற்கரை வரை உள்ள தங்களுக்கு அருகில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்கள் மூலம் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும்.