உங்கள் சேவை தேவை.. தற்கொலை போராட்ட முடிவு வேண்டாம்.. டிராபிக் ராமசாமிக்கு சுப. உதயகுமார் கோரிக்கை
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் போராட்டத்தை தற்கொலை என்று கொச்சைக் படுத்த வேண்டாம் என்று சுப.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் போராட்டத்தை தற்கொலை என்று கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பச்சை தமிழகம் அமைப்பின் தலைவரும் அணுஉலை எதிர்ப்புப் போராளியுமான சுப.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பாரிமுனையில் உள்ள தனது அலுவலக மாடியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். 4வது மாடியில் தற்கொலை மிரட்டல் விடுத்து வந்த டிராஃபிக் ராமசாமி முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும், ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கீழே இறங்க மறுத்து போராடினார்.
இந்நிலையில் டிராபிக் ராமசாமி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பச்சை தமிழகம் அமைப்பின் தலைவரும், அணுஉலை எதிர்ப்புப் போராளியுமான சுப.உதயகுமார், இந்த போராட்டத்தை தற்கொலை என்று கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். டாஸ்மாக் எதிர்த்து நியாயமாக போராடிய சசிபெருமாளின் முடிவு சோகமாக முடிந்த நிலையில், நியாயத்திற்காக போராடும் டிராபிக் ராமசாமி போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உதயகுமார் கேட்டுக் கொண்டார். மேலும் நாடு இப்போது இருக்கும் நிலையில் ராமசாமியின் போராட்டம் நியாயமானது தான் என்றாலும் இந்த முறை போராட்டம் வேண்டாம் என்றும் உதயகுமார் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட டிராஃபிக் ராமசாமியை போலீசார் வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராமசாமி காலை முதல் தன்னுடைய அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.