கொக்கி குமாரும்- சுப்பிரமணியம் சுவாமியும்..!
சென்னை: நெல்லையில் நடந்த திருமண விழாவில் ஆசிர்வாதம் செய்து தாலி எடுத்துக் கொடுத்த சுப்பிரமணியம் சுவாமி, திடீரென மணமகள் கழுத்தில் கட்டப் போய் ஏற்பட்ட பதட்ட செய்தி தமிழக மக்களை இன்று வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.
பயங்கர புத்திசாலியாய் நினைக்கப்பட்ட சுவாமி இன்று ஒரே நாளில் பெரிய காமெடி பீஸாகி விட்டார். அவர் ஏன் இப்படிச் செய்தார், இப்படி நடந்து கொண்டார் என்று யாருக்கும் புரியவில்லை.
விளையாட்டுக்காக செய்தாரா, வேண்டும் என்றே செய்தாரா, தெரியாமல் செய்தாரா என்று புரியவில்லை. அந்த சமயத்தில் சுவாமியை தடுக்க யாரும் முன்வராமல் வேடிக்கை தான் பார்த்தனர். சந்திரலேகாதான் டக்கென சுதாரித்து சுவாமி கையைத் தட்டி விட்டு தாலியை, மணமகனிடம் கொடுக்கச் சொன்னார். அட, அந்த மணமகன் கூட அமைதியாக வேடிக்கைதான் பார்த்தாரே தவிர சுவாமியைத் தடுக்க முன்வரவில்லை. அந்த சமயத்தில் மணமகள் முகபாவனை எப்படி இருந்தது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் சுவாமியின் இந்த செயலை பேஸ்புக்கில் வழக்கம் போல மக்கள் விதம் விதமான கமெண்ட் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். குறிப்பாக புதுப்பேட்டை படத்தில் வரும் கொக்கி குமாரின் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கலாய்க்கின்றனர்.
அந்தப் படத்திலும் இப்படித்தான், ரவுடி கொக்கி குமாராக நடித்த தனுஷ், தாலி எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் தானே தாலியைக் கட்டி மனைவியாக்க விடுவார். அதைக் குறிப்பிட்டு ஜஸ்ட் மிஸ் என்ற ரீதியில் கிண்டலடித்து வருகின்றனர் பேஸ்புக்கில் மக்கள்.