ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்காக சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராகிறார் சுப்பிரமணியன் சுவாமி
விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறதுஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் வாதாட சுப்பிரமணியன் சுவாமி சம்மதம் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதித்தது.
தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8ம்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களின் மீதான இறுதி விசாரணை புதன்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, ரோகின்டன் பாலிநாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
Desi Cattle lovers and pro Jallikattu group met up with Dr. Subramanian Swamy at Delhi. @Swamy39 has promised to revive Jallikattu.
— koms (@komalavalli23) December 1, 2016
Hope 😇🙏 pic.twitter.com/GPjOoNngIz
விலங்குகள் நல வாரியத்தின் தரப்பில் மூத்த வக்கீல் கணேஷ், ஏற்கனவே உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறும் வகையில் அரசின் அறிவிக்கை அமைந்துள்ளது, இது மிருகவதை தடை சட்டத்துக்கு எதிரானது என்றார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமளவில் மிருகநல வாரியம் கூறுவதைத்தான் கூறியுள்ளது. ஆனால் நாங்கள் இதனை வேறுவகையில் பார்க்கிறோம் என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு தமிழக அரசு வக்கீல் யோகேஷ்கன்னா, ஜல்லிக்கட்டு பற்றி மதுரை பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியை நீதிபதிகளிடம் அளித்தார். தமிழர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக காளைகளை அடக்குவது. இந்த விளையாட்டில் எக்காரணம் கொண்டும் காளைகள் காயம் அடைவது இல்லை என்று விளக்கினார். இதற்கு நீதிபதிகள் காளைகள் காயப்படுவது இல்லை என்றால் மனிதர்கள் காயம் அடைகிறார்கள் என்று கூறினார்கள்.
தமிழக அரசு வக்கீல் சேகர் நாப்டே, ஜல்லிக்கட்டில் வீரமான இளைஞர்களால் காளையின் மிதிலை தழுவி காளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ஒரு காளையுடன் மொத்தம் 3 நிமிடங்கள் மட்டுமே செலவிடப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு காளையுடன் செலவிடப்படும் நேரம் 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாகும்.
அரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் நினைத்தால் மிருககாட்சி சாலைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். காட்டில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கும் சிங்கத்தை பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கூண்டில் அடைத்து மனிதர்களின் காட்சிப் பொருளாக வைக்கப்படுகிறது. அதேபோல, குதிரைகளை வைத்து பந்தயம் நடத்தப்படுகிறது. அதற்காக இவற்றையும் தடை செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசின் அறிவிக்கை ஒதுக்கிவைக்க முடியுமா? என்பது தான் கேள்வி என்றனர். கூடுதல் சொலிசிட்டர் நரசிம்மா, மத்திய அரசின் அறிவிக்கை எந்த வகையிலும் தீர்ப்புக்கு எதிராக அமையவில்லை, கலாசார உரிமை என்ற விஷயத்தையும் நம்மால் ஒதுக்கித்தள்ள முடியாது என்றார். இந்த வழக்கின் மீதான விசாரணை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் வாதாட சுப்பிரமணியன் சுவாமி சம்மதம் தெரிவித்துள்ளார். விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி வாதாட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், டெல்லியில் சுப்ரமணியன் சுவாயை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்தே சுப்ரமணியன் சுவாமி ஜல்லிக்கட்டு வழக்கில் ஆஜராக சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுப்ரமணியன் சுவாமியின் பூர்வீகம் மதுரை மாவட்டம் சோழவந்தான் என்பதால்தான் அடிக்கடி மதுரை மாவட்டத்தில் பிரச்சினை என்றால் கிளம்பிவிடுவார்.
சோழவந்தானுக்கு அருகில்தான் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூர் உள்ளது. அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில்தான் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டு பொங்கலுக்காவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதே ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.