விஜயகாந்த்-சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு! தமிழகத்தில் 3வது அணிக்கு வெற்றி வாய்ப்பு- சுவாமி
சென்னை: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் திடீரென சந்தித்து பேசினார். தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள் என்று இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுப்பிரமணியன் சுவாமி, சென்னை, கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை திடீர் விஜயம் செய்தார். அங்கு பொன்னாடை போர்த்தி விஜயகாந்த் அவரை வரவேற்றார். பிறகு விஜயகாந்த்துடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இதன்பிறகு நிருபர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள். திமுகவுக்கு போட்டியாக அதிமுக ஆட்சியிலும் ஊழல் அமோகமாக நடந்து வருகிறது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சந்திப்பு pic.twitter.com/nuoDaDKSze
— DMDKParty (@dmdkparty2005) September 5, 2015
எனவே, தமிழகத்தில் மூன்றாவது சக்தியைதான் மக்கள் ஏற்பார்கள் என்றார். பாஜக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி அமைக்கச் செய்ய முயற்சி செய்து இந்த சந்திப்பு நடந்ததா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, "கூட்டணிகள் குறித்து பேசுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது" என்றார்.