இலங்கை செல்லும் முடிவில் ரஜினி உறுதியாக இருந்தால் பாராட்டுவேன்! - சு சாமி
சென்னை: லைகா வீடுகளை போரில் பாதித்த தமிழர்களுக்கு வழங்க இலங்கைக்குச் செல்லும் முடிவில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால் அவரைப் பாராட்டுகிறேன் என்று பாஜக எம்பி சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
லைகா வீடுகள் வழங்கும் விழா வரும் ஏப்ரல் 9, 10 தேதிகளில் இலங்கை யாழ்ப்பாணம் நகரில் நடக்கிறது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 150 வீடுகளை கையளிக்கிறார்.
இது தொடர்பான செய்திகள் வெளியாக ஆரம்பித்ததும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரஜினி இந்தப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி ரஜினி வருவது சிறப்பானது. அவரை வரவேற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரஜினி இலங்கை செல்வதை சுப்பிரமணிய சாமியும் வரவேற்றுள்ளார்.
"தேவையற்ற சலசலப்புகளைக் கண்டு அஞ்சாமல், இலங்கை செல்லும் முடிவில் ரஜினி உறுதியாக இருந்தால் பாராட்டுவேன்," என்று அவர் கூறியுள்ளார்.