பெண் எஸ். ஐ வீட்டு ஜன்னல் வழியாக சிறுவனை இறக்கி 110 பவுன் நகை கொள்ளை.. பரபரப்புத் தகவல்கள்!
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பெண் எஸ்.ஐ வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே பெண் எஸ்.ஐ யின் வீட்டு ஜன்னலை உடைத்து 110 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த துணிகர கொள்ளையை சிறுவன் மூலம் கொள்ளையர்கள் அரங்கேற்றி உள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.ஐயின் குடும்பம்:
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சாமி தெருவில் வசிப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் வேணுகோபால் ராஜ் இறந்துவிட்டார். இவரது மூத்த மகள் திருமணத்துக்கு பிறகு முகப்பேரில் வசிக்கிறார்.
3 மாதங்களுக்கு முன்னர் திருமணம்:
இவரது இரண்டு மகன்கள் அமெரிக்காவில் உள்ளனர். இரண்டாவது மகள் புவனேஸ்வரி, அயனாவரம் குற்றப்பிரிவு எஸ்.ஐ.யாக பணி செய்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது.
அம்மா வீட்டிற்கு சென்ற புவனா:
திருவல்லிக்கேணி வீட்டில் ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்து வருகிறார். எஸ்.ஐயான புவனேஸ்வரி அடிக்கடி அம்மாவை பார்த்து செல்வார். நேற்று முன்தினம் மதியம், அம்மா வீட்டிற்கு வந்த புவனேஸ்வரி சாப்பிட்டு சென்றுள்ளார்.
ஜன்னல் உடைந்தது கண்டு அதிர்ச்சி:
அதன்பிறகு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். மதியம் 2.30 மணி அளவில் வீடு திரும்பியபோது பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்திருப்பதை பார்த்து அதிர்ந்தார்.
110 பவுன் நகைகள் கொள்ளை:
வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. 2 பீரோவில் இருந்த 110 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி, விலை உயர்ந்த 2 வாட்ச் மற்றும் யி10 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
மயங்கி விழுந்த ராஜேஸ்வரி:
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அலறியபடி அங்கேயே மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர். கண் விழித்த ராஜேஸ்வரி நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக கூறி கதறி அழுதார்.
மகன்கள் அனுப்பிய பணம்:
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் பெண் எஸ்.ஐ மற்றும் வெளிநாட்டில் இருந்து மகன்கள் அனுப்பிய பணத்தில் வாங்கப்பட்டது.
போலீஸ் வழக்குப் பதிவு:
இதுகுறித்து ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஐஸ்ஹவுஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைரேகைகள் சேகரம்:
முதல் கட்டமாக கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நோட்டம் விட்டு கொள்ளை:
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் நன்கு தெரிந்தவர்கள்தான் நோட்டம் விட்டு ராஜேஸ்வரி, வீட்டில் இல்லாத நேரத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது தெரிந்தது.
சிறுவன் என்று சந்தேகம்:
ஜன்னலின் இரண்டு கம்பி மட்டும் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக சிறுவன் அல்லது சிறிய உடல்வாகு கொண்டவர்களால் மட்டுமே செல்ல முடியும். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சிறுவனாகதான் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதிர்ச்சியான சம்பவம்:
எனவே, சிறுவன் உள்பட 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஐஸ்அவுஸ் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.