வாட்டிய பனி… கொட்டி விட்டு போன மழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி
சென்னை: சென்னையில் இன்று காலை நேரத்தில் பெய்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. கடந்த சில நாட்களாக அதிகாலையில் மூடுபனியும், பகல் நேரங்களில் கடும் வெயிலும் இரவில் குளிருமாக வாட்டி வதைத்த நிலையில் இன்று திடீரென பெய்த மழை சென்னை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால் மழைக்கான அறிகுறி எதுவும் இல்லாமல் சென்னையில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. வியாழக்கிழமையன்று லேசாக தூரல் போட்டது. வெள்ளிக்கிழமையன்று மழைக்கான அறிகுறியே இல்லை. இந்த நிலையில் சனிக்கிழமையன்று காலையில் வழக்கம்போல காணப்படும் மூடுபனி தென்படவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
காலை 8.30 மணியளவில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. மழை காரணமாக மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் பகுதியில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடலூர் மாவட்டத்தில், சில இடங்களில் நேற்று காலை முதல் மழை பெய்தது. பல ஆயிரம் ஏக்கரில், அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாராகவுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மழை தொடர்ந்தால், கடந்த 3 மாதங்களாக உழைத்ததற்கு பலன் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழையும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
தை மாதம் அறுவடை மாதம் என்பதால் மழை பெய்ய வாய்ப்பே இல்லை என்பார்கள். பனிக்காலத்தில் பெய்த மழையால் பயிர்கள் அறுவடை செய்வது பாதிக்கும் என்கின்றனர் கடலூர்வாசிகள்.