சென்னை கோயம்பேட்டில் ”திடீர்” பள்ளம் – 10 அடி ஆழத்தில் உருவானதால் மக்கள் அச்சம்!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் சாலையில் திடீரென்று தோன்றிய பள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமம் அருகே குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் உள்ளது. இதன் எதிரில் 100 அடி ரோட்டில் 10 அடி ஆழத்தில் நேற்று பகலில் திடீர் பள்ளம் விழுந்து விட்டது. உடனே கோயம்பேடு உதவி கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அவ்விடத்துக்கு விரைந்து சென்றனர்.
பள்ளம் விழுந்த இடத்தை சுற்றி கயிறு கட்டப்பட்டது. வாகனங்கள் சற்று தள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டது. பள்ளத்திற்குள் பழைய குடிநீர் குழாய் பயன் இல்லாமல் இருந்தது. இந்த குழாய் புதைக்கப்பட்டு இருந்த பள்ளம் சரிவர மூடப்படாமல் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. விழுந்த பள்ளத்தை மூடும் பணியில் குடிநீர்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பள்ளம் ஏற்பட்ட சம்பவம் கோயம்பேட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.