கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட வயலில் தீப்பிடித்தது.. பதற்றம்!
கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட வயலில் திடீரென தீபிடித்தது.
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட வயலில் திடீரென தீபிடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த எண்ணெய் குழாய்களில் இன்று திடீர் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணெய் கசிவு ஏறபட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட வேண்டும் என வலியுறுத்தி காலை முதல் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் வராமல் காவல்துறை அதிகாரிகளே கசிவு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர்.
கசிவு ஏற்பட்ட இடத்தில் திடீர் தீ
இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் திடீரென தீப்பிடித்தது.
பச்சை செடிகளை கொண்டு..
பச்சை செடிகளை கொண்டு காவல்துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது தடியடி
இதையடுத்து கூட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினர் மக்கள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு மக்களும் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டது.
போர்க்களமான கதிராமங்கலம்
இதனால் கதிராமங்கலம் பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இதையடுத்து போலீசாருடன் தள்ளுமுள்ளில் ஏற்பட்ட பொதுமக்கள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரே தீ வைத்தனர்
பொதுமக்கள் தான் எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் தீ வைத்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை மறுத்துள்ள கிராம மக்கள் போலீசாரே தீயை வைத்து விட்டு நாடகமாடுவதாக தெரிவித்தனர்.
2 மாதங்களாக போராட்டம்
இந்த சம்பவங்களால் கதிராமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக கதிராமங்கலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.