சூலூர் எம்எல்ஏ அணி மாறமாட்டார்... கனகராஜ் அளித்த பேட்டியையே வதந்தி என அடித்து சொல்லும் 'செங்ஸ்'
சூலூர் எம்எல்ஏ கனகராஜ் நிச்சயம் அணி மாறமாட்டார். எங்களுடன்தான் இருப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு: சூலூர் எம்எல்ஏ கனகராஜ் நிச்சயம் அணி மாறமாட்டார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சூலூர் அருகே பெரியகுயிலியில் உள்ள கல்குவாரியில் ரூ.50 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் குற்றம்சாட்டினார். இந்நிலையில் கல்குவாரியை மூடாவிட்டால் தான் மாற்று அணிக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனக்கு எதுவும் தெரியாது என்றார். ஆனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனோ சூலூர் எம்எல்ஏ அணி மாறமாட்டார் என்று உறுதியாக தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இன்று வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாய கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது செங்கோட்டையன் கூறுகையில், கோவை மாவட்டம், சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், கல்குவாரியில் நடந்துள்ள ஊழலைதான் விசாரிக்க கூறியுள்ளார். அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். அவர் அணி மாற மாட்டார். எங்களுடன் தான் இருப்பார். இது தவறான தகவல் என்றார் அவர்.
தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜே, நடவடிக்கை இல்லை எனில் அணி மாறுவேன் என்று பேட்டி கொடுத்திருந்த நிலையில் அது தவறான தகவல் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார் செங்கோட்டையன். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று செங்கோட்டையன் சொதப்பியது குறிப்பிடத்தக்கது.