தமிழகம் முழுவதும் கொட்டுது கோடை மழை!... சட்டென்று மாறிய வானிலை!!
தமிழகம் முழுவதும் பல நகரங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. வெப்பம் மறைந்து குளுமை பரவியதோடு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகம் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடைமழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் இருந்த அனல் காற்று வீசத்தொடங்கிவிட்டது பல மாநிலங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. ஜில் மாவட்டமான கோவையில் வெயில் 103 டிகிரியை எட்டியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது. மதுரை மாவட்டம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல நாகை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவையில் கோடை மழை
கோவை மாவட்டத்தில் வெப்பம் வாட்டிய நிலையில் திடீரென பூமி குளிர மழை பெய்துள்ளது. இடி, மின்னலுடன் மழை கொட்டியது. பல மாவட்டங்களில் வறட்சி நிலவினாலும், கோவை மற்றும் கேரளாவுக்கு அருகில் உள்ள கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கும்பக்கரை அருவி
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர்
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று இப்பகுதியில் 14 மி.மீ மழை பெய்தது. கனமழையால் சின்ன சுருளி அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதே போல மஞ்சளாறு அணைப் பகுதியிலும் கனமழை பெய்தது.
அணைகளில் நீர்மட்டம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வறட்சியால் தண்ணீர் வரத்தின்றி காணப்பட்ட சோத்துப்பாறை அணையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். தொடர் மழை நீடிக்கும் பட்சத்தில் அணை முழு கொள்ளளவை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மழை நீடிக்கும்
வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதிகபட்சமாக நீலகிரியில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் தகித்த நிலையில் கனமழையால் குளுமை பரவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.