ரஜினியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?..அக்கக்காக கணக்கெடுக்கும் உளவுத்துறை..அலெர்ட் செய்த 'தலைவர்
நடிகர் ரஜினியின் செல்வாக்கு எப்படி உள்ளது என்று மத்திய மற்றும் மாநில உளவுத்துறை தகவல் சேகரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சுகள் தமிழக அரசியலில் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிக்கு நடிகர் என்பதைத் தாண்டி எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை கணக்கெடுக்கும் பணியில் உளவுத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
'போர்' இந்த வார்த்தையை உதிர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சால் திண்டாட்ட்ததில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள். ஒரு பக்கம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் தலைவரை சந்தித்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கு, மற்றொரு புறம் "கண்ணா போருக்குத் தயாரா இருங்க, போர் வரும்போது பார்க்கலாம், கடவுள் இருக்கான்" என்ற சமிக்ஞை என இந்த மாதம் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.
கோடிக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தியுள்ள ரஜினியை பாஜக என்னும் முகத்தில் களத்தில் இறக்க தீவிரமாக காய் நகர்த்துகிறது பாஜக. கதவு திறந்திருக்கிறது என்றும், ரஜினி முடிவெடுக்க வேண்டிய நேரம் இது என்று பாஜக தலைவர் அமித்ஷா இரண்டு முறை அழைப்பு விடுத்துவிட்டார்.
பாஜக திட்டம்
தமிழகத்தில் மாநில கட்சிகளே கோலோச்சுகின்றன. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கைகோர்த்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் இணை பிரியாத கூட்டணியாக உள்ளன. எனவே ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் பிரிந்து கிடக்கும் அதிமுகவை கொண்டு வந்து தமிழகத்தை கைப்பற்றுவதேஎ பாஜகவின் மனநிலை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"என் வழி தனி வழி"
ஆனால் ரஜினியோ பாஜகவை புறக்கணித்துவிட்டு தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே ரஜினிக்கு நடிகர் என்பதைத் தாண்டி மக்களிடம் இருக்கும் செல்வாக்கு என்ன என்பதை அறிய மத்திய அரசு உளவுத்துறையை முடுக்கிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்று மாநில அரசும் தங்கள் பங்கிற்கு உளவுத்துறை மூலம் மோப்பம் பிடித்து வருகிறதாம்.
ஆராயும் உளவுத்துறை
ரஜினி தனிக்கட்சி தொடங்கினால் யாருக்கு பாதிப்பு, எந்தக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவருடன் கைகோர்ப்பார்கள். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் யார். யாரை வைத்து ரஜினியை வழிக்கு கொண்டு வர முடியும் உள்ளிட்ட தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன.
ஜாக்கிரதை
இதனால் ஒரு பக்கம் புதுப்படமான காலா அறிவிப்பு மற்றும் அது தொடர்பான வேலைகளில் பிசியாக இருந்தாலும் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் "எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது" என்று அனைத்து ரஜினி ரசிகர் மன்றத்தினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
சுதாகருக்கு அதிகாரம்
அவ்வாறு நடந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ரசிகர் மன்ற அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ரஜினி எச்சரித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுப்பை தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும் ரஜினிகாந்த் கடிதத்தில் கூறியுள்ளார்.
எச்சரிக்கையாக செயல்படும் ரஜினி
அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அண்ட விட மாட்டேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார் ரஜினி. இந்நிலையில் ரசிகர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையை பார்க்கும் போது, அவர் அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன் தம்மை சுற்றியுள்ள சூழலை பலப்படுத்த நினைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் பாஜக நெருக்கடி தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் தான் எவ்வாறு அனைவராலும் உற்று நோக்கப்படுகிறோம் என்பதை தெரிந்து சுதாரிப்பாக ரஜினி செயல்படுவதாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.