உச்சநீதிமன்றத்திடம் அட்வைஸ் வாங்கிய ஜெயலலிதா.. முக்கியத்துவம் கொடுத்து விளாசும் தேசிய ஊடகங்கள்
சென்னை: அவதூறு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, உச்சநீதிமன்றம் சீரியசான அட்வைஸ் வழங்கிய செய்தி தேசிய மீடியாக்களில் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.
அதிமுக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை எதிர்த்து விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனுப்பி நோட்டீசுக்கு ஜெயலலிதா இன்னும் ஏன் பதில் அளிக்கவில்லை என கேள்வி எழப்பினர். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர், அந்த நோட்டீஸ் ஜெயலலிதாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
நோட்டீஸ்
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது 213 அவதூறு வழக்குகள் தொடர்ந்தது ஏன் என்பதற்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு, ஜெயலலிதாவுக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த நோட்டீசை மனுதாரர் தரப்பு வழக்கறிஞரே ஜெயலலிதாவிடம் நேரடியாக வழங்க உத்தரவிட்டனர்.
கண்டனம்
மேலும், ''நீங்கள் பொது வாழ்வில் இருக்கும் ஒருநபர். அதனால் நீங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும். கொள்கை விமர்சனங்கள் அவதூறு பேச்சுக்கள் ஆகாது. தமிழகத்தில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முடியாது. அவதுாறு வழக்கு சட்டம், தமிழகத்தில் தான் அதிக அளவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசிய ஊடக கவனம்
நாடு முழுக்க எத்தனையோ மாநில முதல்வர்கள் இருப்பினும், தமிழகத்தில் இருந்துதான் அதிக அவதூறு வழக்குகள் வருவதாக ஏற்கனவே, உச்சநீதிமன்றம் கண்டித்திருந்த நிலையில், நேற்றைய இந்த அதிரடி உத்தரவு, தேசிய ஊடகங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆங்கில சேனல்கள்
டைம்ஸ்நவ், என்டிடிவி, இந்தியா டுடே போன்ற முன்னணி ஆங்கில டிவி சேனல்கள் இந்த செய்தியை அடிக்கடி குறிப்பிட்டு ஒளிபரப்பினர். இன்றும் கூட ஆங்கில ஊடகங்கள் சிலவற்றில் இச்செய்தி மீண்டும் காட்டப்பட்டது. ஹிந்தி உள்ளிட்ட வட மொழி சேனல்கள் மட்டுமின்றி, கன்னடம் உள்ளிட்ட தென் மாநில மொழி ஊடங்களும் இந்த செய்திக்கு முக்கியத்தும் கொடுத்துள்ளன.
நாடு முழுக்க பரவியது
அனைத்து மொழி பத்திரிகைகளும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் அதிக அவதூறு வழக்கு தொடரும் விவரம், இந்த செய்திகள் மூலம், நாடு முழுக்க மளமளவென பரவியுள்ளது.
நெத்தியடி
சென்னை பதிப்பில் இருந்து வரும் ஆங்கில பத்திரிகைகள் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழில் ஒரு முன்னணி பத்திரிக்கை, 'நெத்தியடி' என இந்த செய்திக்கு தலைப்பிட்டு முதல்பக்க பேனர் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மகிழ்ச்சி
தேர்தல் தோல்வியால் துவண்டிருந்த விஜயகாந்த் வட்டாரத்தை உச்சநீதிமன்ற உத்தரவு குதுகலப்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவும், இதை உறுதி செய்யும் வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
பிறந்த நாள் பரிசு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நேரத்தில் தனது அரசியல் எதிரி ஜெயலலிதாவுக்கு தான் தொடர்ந்த வழக்கால் ஏற்பட்டுள்ள பின்னடைவை அவர் பிறந்த நாள் பரிசாக பார்ப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.