போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை நபர் திருச்சியில் கைது! விடுதலைப் புலியா? என போலீஸ் விசாரணை!!
திருச்சி: போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் அவருக்கு உதவிய ராமநாதபுரம் வழக்கறிஞர் ஆகியோரை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த நபர் வலது காலை இழந்துள்ளதால் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையப் பகுதியில் போலீஸார் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியில் வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் காரில் வந்த நபர், விமானத்தில் வெளிநாடு செல்லவிருப்பதாக கூறியதையடுத்து, அவரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஆரோக்கியதாஸ் என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்திருந்தது தெரிந்தது. மேலும், அந்த நபர் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அந்த நபரை போலீஸார் விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்த நபர், இலங்கை, வடக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆ. குமரகுரு என்பதும் அவர் 2014 ஜூலை 21-ந் தேதி இலங்கையிலிருந்து சென்னை வந்ததும் தெரியவந்தது.
சென்னையில் சூளைமேடு பகுதியில் தமிழ் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் உதவியுடன் அங்கு தங்கியிருந்து, பின்னர் ஈக்காட்டுத்தாங்கலில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
பின்னர் சென்னை மயிலாப்பூர் தர்ஹா காலனியைச் சேர்ந்த ஏ. முபாரக் அலி என்ற நபரின் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள உப்பூர் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்ற வழக்கறிஞர் மற்றும் தமிழ் அமைப்பு மாநில நிர்வாகியை தொடர்பு கொண்டு போலி பெயர் மற்றும் முகவரியில் பாஸ்போர்ட் எடுத்துள்ளார்.
திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியா சென்று அங்கிருந்து கனடா மற்றும் சுவிட்சர்லாந்து செல்லவும் குமரகுரு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து இலங்கை நபர் குமரகுரு மற்றும் அவருக்கு உதவியதாக வழக்கறிஞர் திருமுருகன் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே குமரகுரு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இலங்கை யுத்தத்தில் அவர் வலது காலை இழந்து செயற்கைக் கால் பொருத்தியுள்ளார். இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தொடரும் கைதுகள்..
அண்மையில் ராமநாதபுரம் அருகே சயனைடு குப்பிகள், துப்பாக்கி ஆகியவற்றுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றதாக கூறப்பட்டது. தற்போது அதே ராமநாதபுரம் பகுதியில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை நபர் வெளிநாடு செல்ல முயற்சித்து பிடிபட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.