சுவாதி கொலையில் திடீர் திருப்பம்... கொலையாளி ராம்குமார் நெல்லையில் கைது.. நண்பருக்கு வலைவீச்சு!
சென்னை: பெண் பொறியாளர் சுவாதி படு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ராம்குமார் என்பவரை நெல்லையில் போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலையில் அவரது நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்குப் போலீஸார் தற்போது வலை வீசியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தது யார் என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் இரவு பகலாக தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இருந்தும் துப்பு துலங்கவில்லை.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக, கொலையில் தொடர்புடைய செங்கோட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி அருகே உள்ள தேன் பொத்தை மீனாட்சி புரம் கிராமத்தில் ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். பின்னர் செங்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புகொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராம்குமாருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது.
ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனையைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலையில் ராம்குமாரின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் யார் என்ற விவரத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை.