சுவாதி கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்: ராம்குமார் வக்கீல் வலியுறுத்தல்
சென்னை: சுவாதி கொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த 24ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை கடந்த ஜூலை 1ம் தேதி மீனாட்சிபுரத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்க்க எழும்பூர் நீதிமன்ற காவலில் சிறைத்துறை மற்றும் நீதித்துறை ஊழியர்களின் உதவியுடன் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ஒருநாள் அரசு வீடியோகிராபர் மூலம் அவரை வீடியோ எடுக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், சூளைமேடு மேன்ஷனில் ராம்குமார் தங்கி யிருந்தபோது ஏற்கெனவே கையெழுத்திட்டுக் கொடுத்த ஆவணங்களுடன், ராம்குமாரின் தற்போதைய கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்க்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவியல் நடுவர் (பொறுப்பு) கோபிநாதன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. போலீஸாரின் கோரிக்கைக்கு ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரை குற்றவாளியாக்க சதித்திட்டம் நடப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரி விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
புழல் சிறையில் இன்று ராம்குமாரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராமராஜ், சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
மேலும், சுவாதி கொலை வழக்கை காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை. ராம்குமார் குற்றவாளி என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை நடத்துகின்றனர். ராம்குமாரின் ரத்த மாதிரியை சேகரித்திருப்பது அவசியமற்றது என்றும், விசாரணை ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும் ராமராஜன் குற்றஞ்சாட்டினார்.