சுவாதி கொலை வழக்கு.. ராம்குமாரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு
சென்னை: இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஜூன் 24ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது
புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுக்க நுங்கம்பாக்கம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராம்குமாரை நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தி, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகே உள்ள வீடுகளில் கைப்பற்றப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளையும் ராம்குமாரையும் நீதிபதி நேரில் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே, ராம்குமாரை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ராம்குமாரை ஏற்கனவே நுங்கம்பாக்கம் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ராம்குமாரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.